தமிழக விவசாயிகளிடம் அட்ரஸ் சேகரிக்கும் கேரள போலீஸ்
இடுக்கி: கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு செல்லும் தமிழக விவசாயத் தொழிலாளர்களிடம் முகவரி மற்றும் தோட்ட விபரங்களை கேரளா போலீசார் எழுதி வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டங்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளன. அந்த தோட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
தமிழகத் தொழிலாளர்களின் கடும் உழைப்பால்தான் இந்தத் தோட்டங்கள் ஜொலிக்கின்றன, மலையாளிகளுக்கு பணத்தை வாரியிறைத்துக் கொடுக்கிந்றன.
இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தால் இருமாநில உறவுகளும் பாதிக்கப்பட்டு நிலையில் ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக தமிழ்நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இதனால் ஏலக்காய் தோட்டங்களில் எந்த வேலையும் நடைபெறாமல் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏலக்காய் விவசாயிகள் பாதிப்பு
விவசாயப்பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏலக்காய் தோட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தங்களின் தோட்டத்தை பார்வையிடுவதற்காக கம்பமெட்டு ரோட்டின் வழியாக, கேரளா செல்கின்றனர். இருசக்கர வாகனங்கள் மூலம் கம்பத்தில் இருந்து சேத்துக்குழி, அன்னியார்தொழு, வண்டன்மேடு பகுதிகளுக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.
அவ்வாறு செல்லும் போது கம்பமெட்டு சோதனைச் சாவடியில் உள்ள போலீசார், ஊர், பெயர், விலாசம், எஸ்டேட் உள்ள பகுதி மற்றும் விவசாய நிலத்தின் அளவு உள்ளிட்ட விவரங்களை எழுதி வாங்கி வருவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை எதற்காக தெரியவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் சொத்துக் கணக்குகளை சேகரித்த போலீசார் தற்போது தமிழ்நாட்டில் இருந்து ஏலக்காய் தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளின் முகவரிகளையும் சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.