சபரிமலைக்கு செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரள போலீசார் பாதுகாப்பு
பாலக்காடு: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கேரள போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தமிழர்களின் மீது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களின் மீதும் கேரளாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து தமிழக பத்திரிக்கைகளில் கண்டன செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே நேற்று தமிழக, கேரள எல்லைப் பகுதியான வாளையாரில் ஐயப்ப பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேரம் நடந்த இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கேரள போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சபரிமலைக்கு செல்லும் தங்களை மலையாளிகள் தாக்குவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவதாக கேரள போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
தமிழக ஐயப்ப பக்தர்களின் மீது இரு மாநில எல்லைப் பகுதிகளில் அதிகளவில் தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை வாளையாரில் இருந்து திருச்சூர் மாவட்டம் வரை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல கேரள போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அதேபோல சபரிமலையில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை திருச்சூரில் இருந்து பாதுகாப்பாக தமிழக எல்லை வரை கொண்டு வந்து விடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications