எழும்பூர் ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ. 7.5 லட்சம் நகை, பணம் கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை
சென்னை: சென்னை எழும்பூரில் ரயில்வே அதிகாரியின் வீட்டில் ஏழரை லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
எழும்பூர் வேனல்ஸ் ரோட்டில் ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வருபவர் யூனிஸ் ஹெட்சி (வயது 56). இவர் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் கட்டுமான பிரிவில் சூப்பிரண்டாக உள்ளார்.
கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளதை அடுத்து வியாழக்கிழமை இரவு ஹெட்சி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் புரசைவாக்கம் டாணா தெருவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றார். இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
நகை பணம் கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹெட்சி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் அறை முழுவதும் பரவி கிடந்தது.
அதில் இருந்த 37 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.7.5 லட்சம் ஆகும். ஹெட்சி வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் இதனை ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே நேரத்தில் ஹெட்சியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற தெரிந்த நபர்கள் யாரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.