சுனாமியில் மாயமான இந்தோனேசிய சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
ஜகர்த்தா: கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குடும்பத்தைப் பிரி்ந்த சிறுமி 7 ஆண்டுகள் கழி்த்து தனது பெற்றோருடன் சேர்ந்த்துள்ளாள்.
இந்தோனேசியாவைச் சேர்ந்தவள் மேரி யுராந்தா(14). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியின்போது அந்நாட்டில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் பலியானார்கள். அந்த நேரத்தில் மேரியும் சுனாமி அலையில் சிக்கினாள். ஆனால் அந்த பேரலை அவளைக் கொல்லாமல் கரையோரத்தில் தூக்கிப்போட்டது.
அப்போது மேரிக்கு வயது 7. அனாதையாக இருந்த மேரிக்கு ஒரு விதவைப் பெண் அடைக்கலம் கொடுத்தார். அந்த பெண் சிறுமியை தெருத் தெருவாகப் பிச்சை எடுக்கவைத்து பிழைத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் மேரி டாக்ஸி டிரைவர் ஒருவரின் உதவியுடன் அந்த விதவைப் பெண்ணிடம் இருந்து தப்பித்து தனது பெற்றோர் வாழும் கிராமத்திற்கு வந்தார். அங்கு தனது தந்தை மற்றும் தாத்தாவின் பெயரைத் தெரிவித்துள்ளார். மேரியின் தாத்தா அப்பகுதியில் பிரபலமான மத குரு என்பதால் டாக்ஸி டிரைவர் மேரியை அவரது பெற்றோரின் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
மேரி 7 ஆண்டுகள் கழித்து தனது தாய் யுனிஸ்தரைப் பார்த்து அம்மா என்று அழைத்தாள். வளர்ந்திருந்ததால் யுனிஸ்தரால் மகளை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. பிறகு மேரியின் வயிறு மற்று முகத்தில் இருந்த மச்சம், தழும்பு ஆகியவற்றை வைத்து மகளை அடையாளம் கண்டார்.
யுனிஸ்தரின் மூத்த மகளும் சுனாமியின்போது காணாமல் போனாள். அவள் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.