சித்த வைத்தியர்கள், தொழிலாளர்கள் ஓய்வூதியம் ரூ, 1000 ரூபாயாக உயர்வு-ஜெ.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்றவுடனேயே பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டார்கள்.
அந்த வகையில், பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியது போல், தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 60 வயது நிறைவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாயையும் 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
11 ஆயிரம் தொழிலாளர்கள்
இதன் மூலம், கட்டுமான நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு விசைத்தறி நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பாதையோர வியாபாரிகள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் நல வாரியம், ஆகிய நலவாரியங்களில் பதிவு செய்து, 60 வயது நிரம்பிய தொழிலாளர்கள் 11,062 பேர் பயன் பெறுவார்கள்.
நெசவாளர்களுக்கு உயர்வு
இதே அடிப்படையில், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் அமைப்பின் கீழ் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கான முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 வயதினை கடந்த நெசவாளர்களுக்கு, மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் 400 ரூபாயினை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், 19,404 நெசவாளர்கள் பயன்பெறுவர்.
முதல்வர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1.1.92 முதல் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்படி, நெசவாளர் 60 வயதுக்கு முன் இறக்க நேரிட்டால், அவரது வாரிசுதாரருக்கு குடும்ப ஓய்வூதியமாக 550 ரூபாய் அவர் இறந்த நாளிலிருந்து 10 ஆண்டு அல்லது இறந்தவர் உயிருடன் இருந்திருந்தால் 60 வயது எய்தக் கூடிய காலம் வரையில், இதில் எது நெசவாளர்களின் குடும்பத்திற்கு அதிக பயனளிக்குமோ, அவ்வகையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது, இவர்களது மாதாந்திர குடும்ப ஓய்வூதியத் தொகையினையும் 550 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், 1,649 பயனாளிகள் பயன்பெறுவர்.
வைத்தியர்களின் ஓய்வூதியம்
இதே போன்று, பரம்பரை இந்திய மருத்துவ வைத்தியர்களின் வறுமை நிலையினைகளையும் பொருட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து வைத்தியம் செய்துவரும், 60 வயதுக்கு மேற்பட்ட பரம்பரை சித்தா, ஆயூர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் 9,563 மருத்துவர்கள் பயனடைவார் இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications