விசைத்தறி தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம் – ரூ. 3 கோடி இழப்பு
சங்கரன்கோவில் : ஊதிய உயர்வு கோரி சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று 3வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக ரூ.3 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு விசைத்தறி உரிமையாளர்களால் வழங்கப்படுகிறது. கடந்த 24-12-2009 போடப்பட்ட ஓப்பந்தம் முடிந்து விட்டது.
இதனையடுத்து 75 சதவீத ஊதிய உயர்வு விடுமுறை சம்பளம் ரூ.150 வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் 25ம் தேதி நெல்லையில் தொழிலாளர் நல அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.
இதனால் சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 26ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து விசைத்தறி கூடங்களும் இழுத்து மூடப்பட்டு உள்ளன.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 3வது நாளாக விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை. மொத்தம் ரூ.3 கோடிக்கும் மேலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.