சி.பி.ஐக்கு 9 கணவர்கள் எதற்கு?: லாலு பிரசாத்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் நேர்மையானவர் என்பதால், ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக அவரையே நியமிக்கலாம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று லோக்பால் மசோதா மீது நடந்த விவாதத்தில் பேசிய லாலு, இந்தப் பதவிக்கு பிரதமரை விட பொருத்தமானவர் யாரும் எனக்குத் தெரியவில்லை என்றார். இதைக் கேட்டு பிரமதர் உள்பட அனைவரும் சிரித்தனர்.
லாலுவின் இந்த யோசனைக்கு, பல உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய லாலு, மகாபாரதத்தில் திரெளபதிக்கு 5 கணவர்கள்தான். ஆனால், லோக்பால் வரம்புக்குள் கொண்டு வந்தால் சி.பி.ஐக்கு 9 கணவர்கள் ஆகிவிடுவர் என்றார்.
லோக்பாலால் ஊழலை ஒழிக்க முடியாது-முலாயம்:
லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட லோக்பால் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதத்தின் போது எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 2.15 மணி் வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியதாவது,
லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாது. இந்த மசோதாவில் பல முக்கிய அம்சங்கள் இல்லை. லோக்பாலை விட ஜனநாயகம் பெரியது. எம்பிக்கள் மக்களுக்கு பயப்படுகிறார்கள். ஏனென்றால் மக்கள் தான் அவர்களை தேர்வு செய்கின்றனர். சிபிஐ அமைப்புக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் லோக்பால் குறித்தும் கூறலாம். தற்போது தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா ஊழலை ஒழிக்க போதுமானதல்ல என்றார்.
முன்னதாக பேசிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் லோக்பால் மசோதா வலுவாக இல்லை. அது அரசியலமைப்பிற்கு எதிரானது. எனவே அதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார்.
அதற்குப் பதில் அளிப்பது போன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜகவுக்கு விருப்பமில்லை. இந்த மசோதா மட்டும் நிறைவேறாவிட்டால் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் என்றார்.