லோக்சபாவில் 273 உறுப்பினர்களைக் கூடத் திரட்ட முடியாமல் போன மத்திய அரசு
டெல்லி: லோக்சபாவில் நேற்று லோக்பால் மசோதா மீதான வாக்கெடுப்பின்போது அதற்கு அரசியல்சாசன அந்தஸ்து தரும் மசோதா தோல்வி அடைய மத்திய அரசே முழுப் பொறுப்பாக அமைந்தது. காரணம், மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதற்குத் தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்களைக் கூட அது திரட்ட முடியாமல் போய் விட்டது. அதாவது 273 உறுப்பினர்களைக் கூட அது திரட்ட முடியவில்லை.
ஆனால் இந்த நிலைக்கு பாஜகதான் காரணம் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி காட்டமாக கூறியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு கேடான நாள் என்றும் அவர் கோபமாக வர்ணித்தார்.
நேற்று லோக்சபாவில் லோக்பால் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 9 உறுப்பினர்களைக் கொண்ட லோக்பால் அமைப்புக்கு அரசியல்சாசன அந்தஸ்து தர வகை செய்யும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது எழுந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அவையின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் சபையில் இருந்து, அவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் வாக்களித்தால்தான் ஒருதிருத்தத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் தற்போது அவையில் அத்தனை பேர் இல்லை, அதாவது குறைந்தபட்ச உறுப்பினர்களான 273 பேர் இல்லை என்று சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து அரசியல்சாசன அந்தஸ்து தரும் மசோதா தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் மீரா குமார் தெரிவித்தார். இதன் மூலம் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டாலும் கூட அது ஒரு 'டம்மி'யான அமைப்பாகவே செயல்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல்சாசன அந்தஸ்து தரும் மசோதா தோற்கடிக்கப்பட்டது குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடும் அதிருப்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இது ஜனநாயகத்திற்கு மிகவும் சோகமான நாள். பாஜக செய்த குழப்பங்கள்தான் இதற்குக் காரணம். லோக்பால் அமைப்பு வலுவானதாக இருக்க அது விரும்பவில்லை. இதற்கு மக்கள் உங்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள் என்றார்.
இதைக் கேட்டு வெகுண்ட பாஜக மூத்த உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் தொடர தார்மீக ரீதியிலான உரிமையை இழந்து விட்டார். 273 கூட வேண்டாம், 250 உறுப்பினர்களின் ஆதரவைக் கூட இந்த அரசு பெறவில்லை. இந்த அரசு தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே உடனடியாக பிரதமரும், இந்த அரசும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று காட்டமாக கூறினார்.
மொத்தத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றி விட்டு, அதற்கு வலு சேர்க்கும் மசோதாவை நட்டாற்றில் விட்டு விட்டனர் அத்தனை கட்சிகளும் என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications