பாக், ஆப்கானில் இருந்து வடஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்த அல்கொய்தா
லண்டன்: அல்கொய்தா தலைவர்கள், தற்கொலைப்படை தீவிரவாதிகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட்டுவிட்டு வட ஆப்பிரிக்க நாடுகளில் ஊடுருவியுள்ளதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இங்கிலாந்து அதிகாரிகள் கூறியதாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி,
குறைந்தது 2 அல்கொய்தா தலைவர்கள் லிபியாவுக்கு கிளம்பிவிட்டனர். அந்த அமைப்பைச் சேர்ந்த மற்ற தீவிரவாதிகளும் லிபியாவுக்கு செல்லவிருக்கின்றனர். வரும் மாதங்களில் வட ஆப்பிரிக்கா தீவிரவாதிகளின் வாசஸ்தலமாகிவிடும் போல் இருக்கின்றது. ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் பல ஆண்டுகளாக முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் சிலர் வட ஆப்பிரிக்காவுக்கு கிளம்பிவிட்டனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் தான் அவர்கள் இடத்தை காலி செய்து வட ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். அதன் பிறகு அல் கொய்தா மூத்த தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
ஆனால் தீவிரவாதிகள் மேற்காசியாவில் இருந்து வட ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.