அறிவியல் வளர்ச்சி: இந்தியாவை சீனா தோற்கடித்துவிட்டது- மன்மோகன் சிங்
புவனேஸ்வர்: அறிவியல் வளர்ச்சியில் இந்தியாவை சீனா தோற்கடித்துவிட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
புவனேஸ்வரில் 99வது இந்திய அறிவியல் மாநாட்டைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சிகளுக்காக செலவிடப்படும் தொகையை நாம் இரட்டிப்பாக்க வேண்டும்.
இப்போது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 1 சதவீதம் தான் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இதை 2017ம் ஆண்டுக்குள் 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவை சீனா விஞ்சிவிட்டது.
உணவு, எரிசக்தி தட்டுப்பாடுகளை நீக்குவது, நீர் மேலாண்மை ஆகியவை குறித்த ஆராய்ச்சிகளை நாம் அதிகப்படுத்த வேண்டும். அரசும் தனியார் தொழில்துறையினரும் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 15,000 பேர் பங்கேற்றுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து 20 நோபல் பரிசு வென்றவர்கள் உள்ளிட்ட 500 விஞ்ஞானிகளும் பங்கேற்றுள்ளனர்.