மதுரையில் விபத்தில் பெண் பலி: நஷ்டஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி
மதுரை: விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நின்ற அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், கே.புதூர் பரசுராம்பட்டியைச் சேர்ந்த செல்வம் மனைவி கச்சம்மாள்(35). இவர் 10.10.06ல் அரசு பேருந்தில் மூன்றுமாவடி பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றார். ஆனால் அவர் இறங்குவதற்குள் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் சக்கரத்தில் சிக்கிய கச்சம்மாள் பரிதாபமாக பலியானார்.
கச்சம்மாளின் மரணத்துக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி அவரது கணவர் மதுரை 2வது விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4.05 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட நிர்வாக இயக்குனர் நஷ்டஈடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தினர். இதனால் கச்சம்மாள் குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து வட்டியுடன் சேர்த்து ரூ.4.75 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையையும் அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை.
இதனால் கச்சம்மாள் குடும்பத்தினர் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.தனராஜ், அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து மாட்டுத்தாவணியில் இருந்து ஆரப்பாளைம் புறப்பட்ட தாழ்தள டவுன் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
விபத்துகளில் இறப்பவர்களுக்கு நஷ்டஈடு வழங்காமல், தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை நீதிமன்றம் ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடர் கதையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.