இவ்வளவுதான் நிவாரணமா..?- ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு புதுவையில் மக்கள் போராட்டம்
புதுச்சேரி: தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியைப் பார்வையிட வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட நேற்று முன்தினமே ப.சிதம்பரம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் செல்லவில்லை. நேற்றுதான் அவர் சென்னைக்கு வந்தார்.
இன்று அவர் புதுச்சேரி சென்று அங்கு புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு சேத விவரங்களை கேட்டறிந்தார். அவருடன் முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும் உடன் வந்தனர்.
வில்லியனூர், கோர்காடு, டி.என்.பாளையம் ஆகிய இடங்களை பார்வையிட்டு அபிஷேகப்பாக்கத்திற்கு சென்றார்கள். அப்போது அந்த இடத்தில் பொதுமக்கள் ப.சிதம்பரம் வந்த வாகனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
தங்கள் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்களும், அதிகாரிகளும் பார்வையிடவில்லை. தங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை போதுமானதல்ல. புயலால் பாதிக்கப்பட்டதையடுத்து குடிநீர், மின்சாரம் கிடைக்கவில்லை. சரியான நிவாரணம் கிடைக்கவில்லை, புதுச்சேரி அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் நிவாரணம் போதவில்லை.
மத்திய அரசு கூடுதல் நிவாரணத் தொகையை அளிக்க வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை அதிகாரிகளும், அமைச்சர்களும் சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் மக்கள் சமாதானமடையவில்லை. இதையடுத்து ப.சிதம்பரம் அவர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது முதல் கட்டம்தான். முதல் கட்ட நிவாரணத்தை புதுச்சேரி அரசு கொடுக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிட வந்துள்ளேன். சேதம் அதிகம்தான் என்பது தெரிகிறது.
சேத விவரங்களை நான் மத்திய அரசிடம் இதனை மத்திய அரசிடம் தெரியப்படுத்தி கூடுதல் நிவாரணம் வழங்க ஆவண செய்கிறேன். சேத விவரங்கள் குறித்து மாநில அரசும் விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் பின்னர்நிச்சயம் கூடுதல் நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து மக்கள் போராட்டத்தை விலக்கினர்.அதன் பின்னர் ப.சிதம்பரமும் மற்றவர்களும் அங்கிருந்து சென்றனர்.