கடலூர் மக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

தானே புயலால் பாதித்த கடலூர் மாவட்டம் மற்றும் கடலூர் நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பால் சரியாக கிடைக்கவில்லை, மளிகைக் கடைகளில் விற்கப்படும் பால் லிட்டருக்கு ரூ. 50 வரை அநியாய விலைக்கு விற்கப்படுகிறது. குடிநீர் விநியோகம் இல்லை. மின்சாரம் சரிவர இல்லை.
இதனால் மக்கள் கொதிப்படைந்து போராட்டங்களில் குதித்துள்ளனர். மின்சாரம் இல்லாததால் கடைகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் இயங்கவில்லை. இதனால் பால் காய்ச்சும்போது திரிந்து கெட்டுப் போய் விடுகிறது.
இந்த நிலையில் மக்களுக்குப் பால் முறையாகவும், தங்கு தடையின்றியும் கிடைக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி வழக்கமாக கடலூர் நகருக்கு வழங்கப்படும் 20,000 லிட்டருக்குப் பதில் 35,000 லிட்டர் பால் அனுப்பப்பட்டு வருகிறது. 2 டேங்கர்கள், 5 ஆட்டோக்கள் மூலம் நகர் முழுவதும் பால் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு தேவையான பாலைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது.
மேலும் குளிர்சாதனப் பெட்டி பிரச்சினையைத் தீர்க்க குளிர்சாதன வசதி கொண்ட பெரிய டேங்கர் லாரியும் கடலூரில் நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications