பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் வன்முறை- போலீஸ்ர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
திண்டுக்கல் நகரில் செவ்வாய்கிழமையன்று பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டபின் அவரது உடல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. புதன்கிழமை இறுதி ஊர்வலத்தின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் பொதுமக்களும் தாக்கப்பட்டனர்.
இந்த வன்முறையால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தூத்துக்குடி நகருமே சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தின் போது ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் வன்முறையாளர்களை கட்டுபடுத்த அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் கட்சிகள் குறை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமக்குடியில் நடந்த வன்முறையின் போது அதனை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசுக்கு பல வழிகளில் நெருக்கடி ஏற்பட்டது.
எனவே மீண்டும் பரமக்குடி போல் சம்பவம் நடந்து விடக்கூடாது என போலீசாருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
பரமக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அரசு கட்டுபடுத்தியும் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை.அனைத்து அரசியல் கட்சியினரும் அரசையே குறை கூறினர்.அதனால் தான் போலீசார் இந்த விஷயத்தில் பெரிய அளவில் அக்கறை எடுக்க விரும்பவில்லை.
ஊர்வலத்தின் போது பசுபதி பாண்டியன் உடல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் முன்பகுதியில் மருந்துக்கு கூட போலீசார் நிறுத்தப்படவில்லை. ஊர்வலத்தின் பின்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.இது வன்முறையாளர்களுக்கு வசதியாக போய்விட்டது.
ஆம்புலன்ஸ் முன்னால் பைக்கில் சென்றவர்கள் கையில் ஆயுதங்கள் வைத்திருந்ததால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். இவற்றை கண்டும் காணதது போல் இருந்துவிட்டனர் போலீசார். இறுதியில் பாதிக்கப்பட்டது, அப்பாவி பொதுமக்களும், வியாபாரிகளும்தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.