70% மட்டுமே தூய்மையான கட்சி பாஜக: யஷ்வந்த் சின்ஹா
டெல்லி: பாஜக 70 சதவீதம் மட்டுமே தூய்மையான கட்சியாகும் என்று அக் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் குஷ்வாஹாவை கட்சியில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, சமீபகாலமாக ஊழல் கறைபடிந்தவர்கள் பாஜக,வில் அதிகமாக சேர்க்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு யஷ்வந்த் சின்ஹா பதிலளிக்கையில்,
தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் இருந்து, மாறுபட்ட கட்சி என்றால் அது பாஜக மட்டுமே.
பாஜக உஉள்கட்சி ஜனநாயகம் மிகுந்த கட்சியாகும். முன்னாள் அமைச்சர் குஷ்வாஹாவைக் கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத பல பிரச்சனைகளுக்காக நான் கட்சியில் குரல் கொடுத்துள்ளேன். அந்த சுதந்திரம் இங்குள்ளது.
அரசியல் கட்சிகள் அறக்கட்டளைகள் போல் செயல்பட முடியாது. ஒவ்வொரு கட்சியும் நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி தங்களது கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பாஜக 70 சதவீதம் தூய்மையாக உள்ளது; மற்ற கட்சிகள் 20 சதவீதம் மட்டுமே தூய்மையாக உள்ளன. எந்த ஒரு அரசியல் கட்சியும், நூறு சதவீதம் தூய்மையானவை என்று தங்களை கூறிக் கொள்ள முடியாது.
உத்தரப் பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரச்சாரம் இல்லாதது கட்சிக்கு மிகப் பெரிய இழப்பாகும். உத்தர பிரதேசம் உட்பட அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, சிபிஐ குஷ்வாஹா வீட்டைச் சோதனையிட்டதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி தன் கட்சியிலிருந்து அவரை நீக்கினார். அதனைத் தொடர்ந்து குஷ்வாஹாவைப் பாஜக சேர்த்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.