பதவி பறிபோகும் சிக்கலில் சர்தாரி, கிலானி-நாளை தலைவிதியை நிர்ணயிக்கும் நீதிமன்றம்
இஸ்லாமாபாத்: மெமோ ஊழல் மற்றும் இரண்டு ஊழல் வழக்குகள் நாளை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் சர்தாரி மற்றும் பிரதமர் கிலானியின் பதவி தப்புமா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையேயான உறவில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. இதற்கு காரணம் சர்தாரி தான். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவர் தனது ஆட்சியை கவிழ்க்க ராணுவம் சதி செய்வதாகவும், அதனால் தனக்கு உதவுமாறும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு ரகசிய கடிதம் எழுதினார்.
ஆனால் பாகிஸ்தானிய அமெரிக்க தொழில் அதிபரான மன்சூர் இஜாஸ் என்பவர் மூலம் அந்த ரகசிய கடிதம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்யவில்லை என்றும், தனது முழு ஆதரவும் ராணுவத்திற்கே என்றும் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14ம் தேதி பிரதமர் கிலானி ராணுவ தளபதி கயானியை சந்தித்து பேசினார். இதற்கிடையே அரசின் செயல்பாட்டிற்கு ஆதரவு கோரும் வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடக்கின்றது. இதற்கிடையே சர்தாரியின் கடிதம் குறித்த வழக்கும், மேலும் 2 ஊழல் வழக்குகளும் நாளை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. இதற்கிடையே சர்தாரி ரகசியமாக எழுதிய கடிதத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மன்சூர் இந்த விவகாரம் குறித்து இன்று பாகிஸ்தானில் வாக்குமூலம் அளிக்கிறார். இதற்காக அவர் ஏற்கனவே பாகிஸ்தான் வந்துவிட்டார் என்று கூறப்படுகின்றது.
சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சர்தாரியின் பணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றம் கூறியும் அதை ஏற்க அரசு மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சர்தாரியின் பதவி நீடிக்குமா என்பதை தற்போது உச்ச நீதிமன்றம் தான் தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது. ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்ப்பதை விட நீதிமன்றமே சர்தாரியின் பதவியைப் பறிக்கட்டும் என்று ராணுவம் எதிர்பார்க்கின்றது.