மத துவேஷ கட்டுரை: சு.சாமியை விசாரித்த டெல்லி போலீஸ்
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்தியாவில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பதிலடி கொடுக்க வேண்டும். இந்துக்களாகிய நம் அனைவருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஒன்றுபட்ட மனநிலை உருவாக வேண்டும்.
இஸ்லாமியர் ஒருவர் தனது இந்து பாரம்பரியத்தை உணர்ந்து கொண்டு இந்துஸ்தானத்தில் பரந்த இந்து சமூகத்தில் தாங்களும் ஓர் அங்கம் என அவர்களின் இந்து மரபை வெளிப்படுத்தினால் அவர்களை நாம் அரவணைத்து ஏற்க வேண்டும். மற்றவர்கள், இந்தியக் குடிமக்களாக பதிவு செய்யப்பட்டு குடியுரிமை பெற்றிருந்தாலும், வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றி தாங்கள் வெளிநாட்டு சிந்தனையுடன் தான் இருப்போம் என்றால், அவர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த கட்டுரைக்கு கடும் கண்டனம் எழுந்தது. மதவாதத்தைத் தூண்டு வகையில் கட்டுரை எழுதியதால் சாமியை ஹாவர்ட் பல்கலைக்கழகம் தனது ஆசிரியர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது.
இந் நிலையில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்று கூறி கடந்த அக்டோபர் மாதம் டெல்லி போலீசார் சாமி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாமி முன் ஜாமீன் பெற்றார்.
வரும் 30ம் தேதி வரை அவருக்கு முன் ஜாமீன் வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் குறித்து டெல்லி போலீசாரின் கருத்தை கேட்டிருந்தது. மேலும் இனி வரும் காலத்தில் இது போன்ற சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதக்கூடாது என்று உறுதியளிக்குமாறு சாமியைக் கேட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சாமியிடம் டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்தக்கூடும் என்று கூறப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு சாமி தனது வழக்கறிஞர்களுடன் டெல்லி போலீசின் குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு சாமி வந்தார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.