மதுரையில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்.. அவனியாபுரத்தில் 42 பேர் படுகாயம்

மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் தலைமையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று மதுரை அவனியாபுரத்திலும் நாளை பாலமேட்டிலும் நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.
இந்த வீர விளையாட்டைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மதுரையில் குவிந்துள்ளனர்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 280 காளைகள் பங்கேற்றன. காளை அடக்க 195 வீரர்கள் களத்தில் குதித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் சகாயம் நேரில் கண்காணித்து வருகிறார். விதிமுறைகளை மீறும் வீரர்கள் உடனடியாக போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். காளையின் வாலை பிடித்த வீரர் ஒருவரை போட்டியில் இருந்து வெளியேற்ற காவல்துறையினர் அந்த வீரர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
காளைகளை அடக்க முயன்ற 42 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கவுள்ளன.
விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கால் ஜல்லிக்கட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 77 கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் துவங்கிய நிலையில், விலங்குகள் நலவாரியம் ஜல்லிக்கட்டு நடத்த கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 2011 ஜூலை 11ம் தேதி காளை களை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் சேர்த்தது. இதன்படி காளைகளை துன்புறுத்தவோ, காட்சி பொருளாக பயன்படுத்தவோ கூடாது. இதனால் ஜல்லிக்கட்டில் காளைகளை அனுமதிக்க முடியாது என விலங்குகள் நலவாரியம் தெரிவித்தது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தமிழக அரசிடம் முறையிட்டனர். உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும், விலங்குகள் நலவாரியம் ஜல்லிக்கட்டை நிறுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டியது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. காளைகள் குறித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யும்படி ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு பேரவை தலைவர் அம்பலத்தரசு, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி சமூக ஆர்வலர் ராதாராஜன் மனுதாக்கல் செய்தார்.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசின் நிலையை விளக்கினார். இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து, உயர் நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன், உயிரிழப்பை தடுக்க மேலும் பல புதிய கட்டுப்பாடுகளையும் உயர் நீதீிமன்றம் விதித்தது. இதன்படி போட்டிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் 10 பேர் காயம்:
அதே போல திருச்சி மாவட்டம் சூரியூர் பகுதியில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், 10 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications