5 கட்டங்களாக தேமுதிக அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முதல் கட்டமாக 22.1.2012 முதல் 28.1.2012 வரை தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களில் உள்ள கிளை கழகங்கள், நகரம், பேரூர் பகுதியில் உள்ள வார்டு, வட்ட கழகங்களுக்கும், கழக அமைப்பு தேர்தல்கள் நடைபெறும்.
2வது கட்டமாக பிப்ரவரி மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் ஊராட்சி கழகம், பேரூர் கழகம், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளில் உள்ள கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும்.
அதேபோல 3வது கட்டமாக பிப்ரவரி மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில் நகர கழகம், ஒன்றிய கழகம் தேர்தலும், 4ம் கட்டமாக 13.2.2012ம் தேதி மாவட்ட கழகத்திற்கும் கழக அமைப்பு தேர்தல்கள் நடைபெறும். இவை நிறைவு பெற்றவுடன் தலைமை கழக நிர்வாகிகளுக்கான 5ம் கட்ட தேர்தல் நடைபெறும்.
இந்த தேர்தல்களை நடத்துவதற்கு தேமுதிக சட்ட விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் நடத்தும் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு துணையாக மாநகரம், ஒன்றியம், நகரம், பேரூர், பகுதிகள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆணையாளரை நியமனம் செய்வார்கள்.
மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.