காணும் பொங்கல்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னையில் நாளை (17.01.2012) காணும் பொங்கலை ஒட்டி முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நகர போக்குவரத்து காவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் முதல் காந்தி சிலை வரை பொது மக்கள் சாலையில் முழுவதுமாகக் கூடும்வரை எந்த போக்குவரத்து மாற்றமும் செய்யப்படாது. அதே நேரத்தில் உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகக் கூடும் போது காந்தி சிலையில் இருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் டாக்டர்.ராதாகிருஷ்னன் சாலையில் திருப்பிவிடப்பட்டு ராயபேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜி.பி. ரோடு, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி பாயின்ட், குளு சாலை வழியாக ராஜாஜி சாலைக்கு மாற்றிவிடப்படும்.
போர் நினைவுச் சின்னத்திலிருந்து அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் போர் நினைவுச் சின்னத்தில் திருப்பிவிடப்பட்டு பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை, பட்டுளாஸ் ரோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராமகிருஷ்ணா மடம் ரோடு வழியாக அடையாறை சென்றடையலாம்.
காந்தி சிலைக்கு அருகில் சாலையில் கூட்டம் அதிகமானால், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வரும் வாகனங்கள், கிரீன்வேஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் ரோடு, மந்தவெளி சந்திப்பு, லஸ் கார்னர், ராயப்பேட்டை 1 பாயின்ட், ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜி.பி. ரோடு, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் லைட் பாயின்ட், ஈ.வே.ரா சாலை, தெற்கு மின்ட் சாலை, ஈவினிங் பஜார் சாலை, என்.எஸ்.சி போஸ் ரோடு வழியாக ராஜாஜி சாலையை அடையலாம்.
வாகன ஓட்டுனர்கள் அனைவரும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.