கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க மீண்டும் ஜெவை சந்திக்க நாராயணசாமி திட்டம்
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் நாராயணசாமி மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு 4 அடுக்குப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
மின் நிலையம் தொடர்பாக அங்குள்ள மக்களுக்கு எழுந்துள்ள சில சந்தேகங்களைப் பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.
அணு மின் நிலையத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகளும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் அணு மின் நிலையத்தைப் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் சென்னை சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தார். அப்போது, மின் நிலையத்தைத் திறக்க ஒத்துழைப்பு அளிப்பதாக ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
கடும் மின் பற்றாக்குறையால் தவிக்கும் தமிழகத்துக்கு இந்தத் திட்டம் பேருதவியாக அமையும். அணு மின் நிலையத்தை விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்படும். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் சந்திக்க உள்ளேன் என்று கூறியுள்ளார் நாராயணசாமி.