முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக நிபுணர் குழு கூறுவதை ஏற்க மாட்டோம்-கேரளா
சென்னை: முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று மத்திய நிபுணர் குழு கூறுவதை ஏற்க மாட்டோம் என்று கேரள மாநில மீன்வளத்துறை அமைச்சர் பாபு சென்னையில் கூறியுள்ளார்.
கேரள மாநில மீன் வளத்துறை சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய சர்வதேச மீன்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 2002-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த கண்காட்சி, அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 5 நாட்கள், கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து நேற்று சென்னைக்கு வந்த பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர எங்கள் அரசு தயாராக இருக்கிறது. ஆனால், எங்களது பாதுகாப்பு முக்கியம். முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இருக்கிறது. பழைய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டதால், அணை பலகீனமாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் உடைப்பு ஏற்பட்டால், கேரளாவில் 6 மாவட்டத்தில் உள்ள 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண கேரள அரசு விரும்புகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெளியேயும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண முயற்சி எடுத்து வருகிறோம்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்ற மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று கேரள அட்வகேட் ஜெனரல் ஊடகங்கள் மத்தியில் கூறியது தவறான தகவல் ஆகும் என்றார் அவர்.