மீடியா மூலம் பேசாதீர்கள், எங்களிடம் நேரடியாக பேசுங்கள்-மாதவன் நாயர்
பெங்களூர்: எங்களுடன் மத்திய அரசு பேச வேண்டும் என்று விரும்பினால் நேரடியாக எங்களுடன் பேசலாம். அதை விடுத்து மீடியாக்கள் மூலம் பேசுவது சரியல்ல என்று அரசுப் பணியில் சேர தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.
ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக சமீ்பத்தில் மாதவன் நாயர் உள்ளிட்ட நான்கு விஞ்ஞானிகள் அரசுப் பணியில் சேர தடை விதித்தது மத்திய அரசு. இதற்கு மாதவன் நாயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவராக இருக்கும் ராதாகிருஷ்ணன்தான் இதன் பின்னணியில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், மாதவன் நாயர் உள்ளிட்டோருடன் பேச அரசு தயார் என மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இதுகுறித்து மாதவன் நாயர் கூறுகையில், எங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மேலும் இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும்.
நிச்சயமாக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.எங்களிடம் அல்ல, இந்த நாட்டிடம். சிலர் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் நாட்டின் முன்பு மன்னிப்பு கேட்டாக வேண்டும்.
இந்த விஷயத்தில் அரசு உண்மையான அக்கறையுடன் இருக்குமானால் இந்த உத்தரவைத் திரும்பப் பெற அது உத்தரவிட வேண்டும்.
இந்த அரசு என்னுடனோ மற்ற மூன்று பேருடனோ பேச விரும்பினால் நேரடியாகத்தான் அணுக வேண்டும். அதை விட்டு விட்டு மீடியாக்கள் மூலமாக பேசக் கூடாது. இது எங்களது கெளரவம், நேர்மை சம்பந்தப்பட்டது.
நாராயணசாமி பேசி வருவது எங்களுக்குப் புரியவில்லை.அவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. எங்களது கருத்துக்களை அரசு நேரடியாக கேட்டால் நாங்கள் எப்போதும் அதைக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்.
எங்களைத் தடை செய்தது தொடர்பான உத்தரவு இதுவரை எங்களுக்கு வரவில்லை. ஏன் ஒரு தகவல் தொடர்பு கூட இல்லை. மீடியா மூலம்தான் எல்லாம் வருகிறது. நாங்கள் இந்தியாவில்தான் வசிக்கிறோம், இங்குதான் வாழ்கிறோம்.எங்களுக்கு மொபைல் போன் உள்ளது, இமெயில் முகவரி உள்ளது. தபால் முகவரி உள்ளது. எல்லாமும் உள்ளது. ஆனால் இதுவரை ஒரு தகவல் தொடர்பு கூட இல்லை.
நாங்கள் விமானத்தைக் கடத்தவில்லை. நாங்கள் கடத்தல்காரர்கள் இல்லை, தீவிரவாதிகள் இல்லை. பிறகு ஏன் எங்கள இப்படி நடத்துகிறார்கள். உண்மை வெளிவர வேண்டும் என்றார் அவர்.