சர்ச்சை கருத்துகள் வழக்கு: யாஹூவின் கோரிக்கையை ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

சமூக வலைதளங்களில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தது தொடர்பான வழக்கில் யாஹூ இந்தியா நிறுவனத்துக்கும் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இதனை எதிர்த்து யாஹூ நிறுவன்ம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
யாஹூ நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அர்விந்த் நிஹாம், மனுதாரரின் புகாரில் எமது நிறுவனத்தின் பெயர் இடம்பெறாததால் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இது நீதிபதி சுரேஷ் கைத் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ஆர்குட், பேஸ்புக், ப்ளாக்ஸ்பாட் போல் யாகூ இணையம் ஒரு சமூக வலைதளம் அல்ல என்பது யாஹூ நிறுவனத்தின் கருத்து. மின்னஞ்சல் மற்றும் சாட்டிங் வசதிகளை மட்டுமே யாகூ நிறுவனம் வழங்குகிறது. ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் யாஹூ இணையதளத்தில் இடம்பெறுவதில்லை. மற்ற சமூக வலைதளங்களிலிருந்து வேறுபாடானது என யாஹூ வாதிட்டது.
எதிர்மனுதாரரான வினய் ராய், யாஹூ நிறுவனத்தின் புகார் மனு நகல் கிடைக்காத நிலையில் பதிலளிப்பது கடினம் என்றார்.
இதையடுத்து தற்போதைய நிலையில் வழக்கு விசாரணை தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மார்ச் 13-ந் தேதி நடைபெறும் மூல வழக்கின் விசாரணைக்கு முன்பாக யாஹூ மனு மீது மார்ச் 1- ந்தேதி விசாரணை நடைபெறும் என்றார்.
வழக்கு என்ன?
டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 23-ந் தேதி ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் 22 இணையதளங்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவிலும் 21 இணையதளங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
21 நிறுவனங்களில் கூகுள் இந்தியாவும் பேஸ்புக் இந்தியாவும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் சம்மனுக்கு எதிராக ஏற்கெனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன.












Click it and Unblock the Notifications