நடராஜன், பாஸ்கரன் மீதான வெளிநாட்டுக் கார் வழக்கு..10 ஆண்டுக்குப் பின் மீண்டும் விசாரணை
சென்னை: வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்ததில் உரிய வரிகளைக் கட்டாமல் மோசடி செய்தது தொடர்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அக்காள் மகன் பாஸ்கரன் ஆகியோர் மீதான வழக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட் விசாரணைக்கு எடுத்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு, அதிமுக ஆட்சி நடந்து வந்து கொண்டிருந்தபோது நடராஜனும், பாஸ்கரனும் இணைந்து ஒரு வெளிநாட்டு ஆடம்பரக் காரை வாங்கி சென்னைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் இந்த கார் இறக்குமதிக்கு முறையாக அவர்கள் வரி கட்டாமல் ஏய்த்து விட்டனர். இதையடுத்து மத்திய அமலாக்கப் பிரிவு, சென்னை பொருளாதார கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. ஆனால் அந்தவழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மூலம் நடராஜனும், பாஸ்கரனும் தடை வாங்கி விட்டனர். இதனால் கடந்த 10 வருடமாக அது கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது.
தற்போதுதான் சசிகலா முகாமுக்கு கெட்ட காலம் பிறந்துள்ளதே..இதன் எதிரொலியாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்குக்கு தற்போது திடீரென உயிர் கொடுத்துள்ளனர். சமீபத்தில் விசாரணைக்கான தடை நீங்கியது. இதையடுத்து நேற்று விசாரணை தொடங்கியது. அப்போது அரசுத்தரப்பு சாட்சி ஜானகிராமன் என்பவர் மட்டுமே ஆஜராகியிருந்தார். நடராஜனும் வரவில்லை, பாஸ்கரனும் வரவில்லை. இதனால் விழக்கு விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு மாஜிஸ்திரேட்தள்ளி வைத்து உத்தரவிட்டார்.