புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குக் கூடுதல் அலைக்கற்றை வழங்குவது, ஒரே மாதிரியான உரிமக் கட்டணம் வசூலிப்பது போன்றவை இதில் இடம்பெற்றிருக்கின்றன. அலைக்கற்றையையும் தொலைத் தொடர்பு உரிமத்தையும் தனித்தனியே பிரித்து அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியதாவது:
- ஜிஎஸ்எம் செல்போன் சேவை அளிப்பதற்காக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அலைக்கற்றை இணையின் வரம்பு தில்லி மற்றும் மும்பை தவிர்த்த பிற மண்டலங்களில் 8 மெகா ஹெர்ட்ஸாக இருக்கும். தில்லி மற்றும் மும்பையில் 10 மெகா ஹெர்ட்ஸ் வரை அலைக்கற்றை இணை வழங்கப்படும். இப்போது இந்த வரம்பு 6.2 மெகா ஹெர்ட்ஸ் என உள்ளது.
- புதிய தொலைத் தொடர்புக் கொள்கையில் அலைக்கற்றைக்கு வழங்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தேவைப்பட்டால் கூடுதல் அலைக்கற்றையை வெளிச் சந்தையில் நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
- ஜிஎஸ்எம் சேவை அளிக்கும் பழைய நிறுவனங்கள் புதிய வரம்புக்குக் கூடுதலாக அலைக்கற்றை வைத்திருந்தால், அதற்குத் தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.
- புதிய உரிமங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இருக்கும். அதன்படி, உரிமங்களும் அலைக்கற்றையும் தனித்தனியே பிரித்து வழங்கப்படும்.
-தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் அவற்றின் ஒட்டுமொத்த வருவாயில் 6 முதல் 8 சதவீதம் வரை உரிமக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இனிமேல், ஒரே மாதிரியாக 8 சதவீத உரிமக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும்.
- உரிமங்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இப்போது உரிமக் காலம் 20 ஆண்டுகளாக இருக்கிறது.
- புதிய கொள்கையின்படி, ஒருங்கிணைக்கப்பட்ட உரிமத்துக்கு மாறுவதற்கு அனைத்து நிறுவனங்களும் தனியாக நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்கள் "ஏ' மண்டலங்கள் எனக் குறிக்கப்பட்டு, அங்கு ரூ. 2 கோடி வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். "பி' மண்டலங்களுக்கு ரூ. 1 கோடியும், "சி' மண்டலங்களுக்கு ரூ.50 லட்சமும் நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒரே மண்டலத்தில் சேவையளித்துவரும் நிறுவனங்கள் அலைக்கற்றையைப் பகிர்ந்து கொள்வதற்கு புதிய தொலைத் தொடர்புக் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. 3ஜி சேவையளிப்பதற்கான உரிமம் பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.
- ஒதுக்கப்படும் அலைக்கற்றையில் நிறுவனங்கள் பயன்படுத்தும் அளவை ஆய்வு செய்யும் வகையில், டிராய் அமைப்பு அவ்வப்போது அதனைத் தணிக்கை செய்யும். - கூடுதல் அலைக்கற்றை வழங்குவது ஜிஎஸ்எம் சேவைக்கு மட்டுமே பொருந்தும். சிடிஎம்ஏ சேவையளிக்கும் நிறுவனங்களுக்கான இரட்டை அலைக்கற்றை வரம்பு 5 மெகா ஹெர்ட்ஸ் என்கிற அளவில் தொடரும் என்றார் அவர்.
ஆனால் மத்திய அரசின் தொலைத் தொடர்பு கொள்கை குறித்து நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
"புதிய தொலைத் தொடர்புக் கொள்கையின் விதிமுறைகள் பெரும்பாலும் தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் பரிந்துரைப்படியே அமைந்திருக்கின்றன. இருந்தாலும், ஒரே மாதிரியாக 8% உரிமக் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இந்தக் கட்டணம் இன்னும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம்' என்று இந்திய செல்போன் சேவையளிப்போர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.மேத்யூஸ் கூறினார்.