தமிழக மீனவர்களை படுகொலை செய்த 2 இத்தாலியர்கள் கைது
கொச்சி: தமிழ்நாட்டு மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற வழக்கில் 2 இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மீனவர்கள் அஜேஷ் பிங்கி, ஜலாஸ்டின் ஆகியோர் கொல்லம் பகுதியை ஒட்டிய கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இத்தாலியைச் சேர்ந்த "என்ரிகா லெக்ஸி' என்கிற சரக்குக் கப்பலிருந்த காவலர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து அந்தக் கப்பல் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
கப்பலில் இருந்த மாஸிமிலியனோ, சல்வதோர் ஜிரோன் ஆகியோர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சரணடையும்படி கேரள போலீஸார் சனிக்கிழமை கெடு விதித்தனர்.
பிடிவாதம்
இருப்பினும் இத்தாலிய கப்பலில் இருந்தோர் சரணடையாமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் கொலையாளிகளை கைது செய்வதில் தாமதம் நீடித்தது.
இநிந்லையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அவர்களை ஒப்படைப்பதற்கு கப்பல் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். ஆனாலும், அவர்கள் 8 மணி நேரம் தாமதமாகவே ஒப்படைக்கப்பட்டனர்.
கேரள போலீஸார் கப்பலுக்குச் சென்று மாலை 4 மணிக்கு அவர்கள் இருவரையும் கரைக்குக் கொண்டுவந்தனர்.
மும்பையிலுள்ள இத்தாலி தூதரக தலைமை அதிகாரி கியான் பாவ்லோ குடிலோ, பாதுகாப்பு அதிகாரி பிரான்கோ ஃபாவ்ரே ஆகியோரும் விசாரணையின்போது உடன் இருந்தனர்.
இருவரையும் அருகிலுள்ள வெலிங்டன் தீவிலுள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை விருந்தினர் மாளிகைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கப்பல் கேப்டனிடமும் சுமார் 20 சிப்பந்திகளிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் அளித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கப்பலில் உள்ள ஆவணங்களையும் போலீஸார் சோதனையிட்டனர் என்று ஐ.ஜி. பத்மகுமார் தெரிவித்தார்.
இத்தாலி மும்முரம்
இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில், இந்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகளை இத்தாலியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர்.
இதுபோன்ற விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இதுவரை செய்து கொள்ளப்படாததால், சொந்தமாக இருதரப்பினரும் புலனாய்வு செய்து தீர்வு காண்பது என முடிவெடுக்கப்பட்டது.
இந்த விஷயத்தில் இந்தியா நடந்து கொண்ட முறைக்கு இத்தாலிய அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.