சாவிலும் கூட இணைபிரியாத 90 வயதைக் கடந்த வேலூர் தம்பதி
வேலூர்: வேலூரில் 70க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த 90 வயதை கடந்த தம்பதியர் சில மணிநேர இடைவெளியில் இறந்த சம்பவம் ஊர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பனப்பாக்கத்தை அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி(98). தையல்காரர். அவரது மனைவி வரதம்மாள்(92). கடந்த 70க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துரைசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த உறவினரும், அக்கம் பக்கத்தினரும் நேற்று காலையில் கூடிவந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது கணவரின் பிரிவை தாங்க முடியாமல் வரதம்மாள் தனது மார்பில் அடித்து கொண்டு அழுதார். அதன் பிறகு துரைசாமியின் காலில் விழுந்து கதறிய அவர் நீண்ட நேரமாக சலனமற்று கிடந்தார். அதனை கண்ட உறவினர்கள் வரதம்மாளை எழுப்ப முயன்றனர். அப்போது அந்த மூதாட்டி இறந்துவிட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து துரைசாமியின் உடலுக்கு அருகிலேயே வரதம்மாளின் உடலையும் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் ஒரே பாடையில் 2 உடல்களையும் வைத்து மாலை 5 மணிக்கு சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு 2 பேரின் உடல்களுக்கும் மகன் ஜெயராமன் தீ மூட்டினார்.
தற்போது திருமணமான சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதியர் பிரிந்து விடுகின்றனர். இந்த நிலையில் கடந்த 70க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து, இறந்த போதும் ஒன்றாக விடை பெற்ற துரைசாமி, வரதம்மாள் ஜோடியை கண்டு ஊர்மக்கள் வியப்படைந்தனர்.