தேர்தல் கட்டுப்பாட்டு அறையை நெல்லையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு மாற்ற மதிமுக கோரிக்கை
நெல்லை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதனை சங்கரன்கோவிலுக்கு மாற்ற மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மதிமுத தேர்தல் பொறுப்பாளர் நிஜாம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் மட்டுமே இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை நெலலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் அனைவரும் எந்தவொரு கடித தொடர்பு, தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் பெறுவது மற்றும் பிரச்சாரம், பொது கூட்டங்களுக்கு அனுமதி கடிதம் பெறுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களுக்கும் நெல்லைக்கு செல்ல வேண்டியதிருக்கும். இதனால் தேவையற்ற காலதாமதமும், இடையூறும் ஏற்படும். எனவே, தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்திலேயே இயங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.