முல்லைப் பெரியாறு: ஆனந்த் குழு கூட்டம் திடீர் ரத்து
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான நீதிபதி ஆனந்த் குழுவின் நாளைய கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இக்குழு நாளை கூடி விவாதிக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
அணைப் பகுதியில் துளையிட்டு வல்லுநர் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த அறிக்கை வந்தவுடன் ஆனந்த் குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்.
கூட்டம் ரத்து ஏன்?
இந்த நடைமுறைகளுக்கு சில காலம் ஆகும் என்பதால் அதிகாரமளிக்கப்பட்ட தங்கள் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு ஆனந்த் குழு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் நாளைய கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர் செயலர் சத்பால் தெரிவித்துள்ளார்.
அணைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு பணி முடிவடையாததே இக்குழுவின் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனந்த் குழு பதவிக் காலம்
இதனிடையே அதிகாரமளிக்கப்பட்ட ஆனந்த் குழுவின் பதவிக் காலம் பிப்ரவரி 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் இந்தக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே. ஜெயின் இடம்பெற்றுள்ள ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை மறு நாள் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.