சென்னையில் நடந்தது என்கௌன்டரா, கொலையா என்று சிபிஐ விசாரணை?
சென்னை: சென்னையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட என்கௌன்டர் பற்றி விரைவில் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
நேற்று அதிகாலை சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் என்கௌன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது என்கௌன்டர் அல்ல கொலை என்று சந்தேகம் எழுந்ததையடுத்து இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர என்கௌன்டர் குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாவட்ட மாஜிஸ்திரேட் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளான பெருங்குடி மற்றும் கீழ்கட்டளையில் வங்கிகளில் ரூ. 35 லட்சத்தை துப்பாக்கி முனையில் ஒரு மாத கால இடைவெளிக்குள்ளேயே மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் வங்கிக் கொள்ளைக் கும்பல் தலைவன் என்று சந்தேகிக்கும்படியான ஒரு நபரின் வீடியோ படத்தை சென்னை காவல்துறை வெளியிட்டது.
இந்த வீடியோ படம் வெளியிடப்பட்ட நிலையில் சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்தது. கொல்லப்பட்டவர்கள் வினோத் குமார், சந்திரிகா ரே, ஹரிஷ் குமார், வினய் பிரசாத் மற்றும் அபய் குமார் என்று தெரிய வந்தது.
போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேரும் கொல்லப்பட்டது சர்ச்சையையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்கலாம் என்று கூறப்படுகின்றது.