+2 பொதுத்தேர்வு: பறக்கும் படையில் தொழிற்கல்வி ஆசிரியர்கள்- அரசுத் தேர்வுகள் இயக்குனரகம்
சென்னை: +2 பொதுத் தேர்வு பணிகளில் பறக்கும் படை உறுப்பினர்களாக தொழிற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பல ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டங்களுக்கு பிறகு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் +2 அரசு பொதுத் தேர்வு பணிகளில் பறக்கும்படை உறுப்பினர்களாக தொழிற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இதனை தொழிற்கல்வி ஆசிரியர்கள் கழகம் வரவேற்கின்றது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் பலமுறை கொடுத்த விண்ணப்பத்தின் பேரிலும், இது குறித்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், +2 அரசு பொதுத்தேர்வு பணிகளில் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களையும் பறக்கும் படை உறுப்பினராக நியமிக்கலாம் எனறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளில் தொழிற்கல்வி பாட வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இக்குறைபாடுகளை தவிர்க்க தொழிற்கல்வி ஆசிரியர்களையும் துறை அலுவலராக, கூடுதல் துறை அலுவலராக நியமிக்க வேண்டுகின்றோம்.
இல்லையெனில் தமிழக அரசு நடத்தும் அரசு பொதுத்தேர்வு பணிகளில் பொதுக்கல்வி பாடத்திற்கு அப்பாடத்தை நடத்தும் முதுகலை ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்தி வருவதை போல, தொழிற்கல்வி பாட பொதுத்தேர்வு பணிகளில் 100 சதவீதம் தொழிற்கல்வி ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.