கொள்ளையர்கள் தாக்கும்போது மனித உரிமை அமைப்புகள் ஏன் வருவதில்லை?- மக்கள் கேள்வி!
பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இணைந்து உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளன. இந்த குழுவைச் சேர்ந்தோர் மார்க்ஸ் தலைமையில், நேற்று வேளச்சேரியில் என்கவுண்டர் நடந்த வீட்டைப் பார்க்க வந்தனர். ஆனால் அவர்களைப் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்தனர் மனித உரிமை அமைப்பினர்.
ஆனால் மக்களிடமிருந்து வந்த கேள்விகளை மனித உரிமைக் குழுவினர் எதிர்பார்க்கவில்லை. விசாரணைக்கு வந்த மனித உரிமைக் குழுவினரை நோக்கி, கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா?
நாங்கள் உயிருக்கு பயந்து இருந்தோம். போலீசார் கொள்ளையர்களை சுடாமல் இருந்தால் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள்? அப்போது மனித உரிமைகள் அமைப்பு என்ன செய்யும்? என்று கேட்டு அனைவரும் வெளியேற வேண்டும் என்று கூறினர். அத்தோடு நில்லாமல் தெரு முனை வரை அனைவரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் குறுக்கிட்டு அனைவரையும் அமைதிப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் பாதிக்கப்படும் போது மனித உரிமைகள் அமைப்பு வருவதில்லை. இவர்களை விரட்டிவிட்டதால் எங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கவலைப்படமாட்டோம். கொள்ளையர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை நியாயமானது. நாங்கள் போலீசாருக்கு ஆதரவாக செயல்படுவோம். 5 பேர் மட்டுமின்றி பெண்களிடம் வழிப்பறி செய்பவர்கள் மீதும் என்கவுன்டர் நடத்த வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.
பின்னர் உண்மை கண்டறியும் குழுவினர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் மார்க்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் உண்மை கண்டறியும் குழுவில் பல்வேறு மனித உரிமை குழுவை சேர்ந்த சுமார் 30 பேர் உள்ளனர். இப்போது சென்னை போலீசார் நடத்திய என்கவுன்ட்டர் பற்றி விசாரணை நடத்துவதற்கு, சம்பவம் நடந்த வேளச்சேரி பகுதிக்கு சென்றோம். ஆனால் போலீசார் எங்களை உள்ளே விட மறுத்தனர். இருப்பினும் சில பொதுமக்களை சந்தித்து பேசினோம். இந்த நிலையில் சிலர் போலீசுக்கு ஆதரவாக பேசி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்கவில்லை.
இதனால் அதுபற்றி போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம். என்கவுன்ட்டர் பற்றி கமிஷனரிடம் சில விளக்கங்களை கேட்டோம். அவர் கொடுத்துள்ள விளக்கங்கள் எங்களுக்கு திருப்தி இல்லை.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களை உயிரோடு பிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம். இது போலி என்கவுன்ட்டராக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். இது தொடர்பான அறிக்கை நிருபர்களுக்கு கொடுக்கப்படும்.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணையும் நடத்த வேண்டும் என்றார்.