மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பெண் மர்மச்சாவு- நெதர்லாந்து இளைஞரிடம் விசாரணை
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அவரது காதலரான நெதர்லாந்து நாட்டு வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .
நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ராம்கோ சினேகர் மார்ட்டின்(வயது32). இவர் அந்த நாட்டில் படகு கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் 4 ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுரத்துக்கு வந்தார். அப்போது, மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புருசம் குப்பம் என்ற இடத்தில் வீடு ஒன்றை கட்டினார். பின்னர் அவர் நெதர்லாந்து சென்று விட்டார்.
சமீபத்தில் அவர் மீண்டும் மாமல்லபுரம் வந்தார். அவருடன் ஜோஸ் விடி விலைட்(35) என்ற பெண்ணும் வந்தார். காதலர்கள் என்று கூறப்படும் இவர்கள் சுற்றுலா விசாவில் இங்கு வந்தனர்.
பின்னர் இருவரும், வெண்புருசம் குப்பத்தில் உள்ள வீட்டில் ஒரு வாரம் தங்கினார்கள். கடந்த 21-ந்தேதி இரவில் ஜோஸ் விடி விலைட், வீட்டில் உள்ள ஒரு அறையில் பிணமாக கிடந்தார். இது பற்றி மாமல்லபுரம் போலீசில் மார்ட்டின் நேற்று புகார் கொடுத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சம்பவ வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். பிணமாக கிடந்த பெண்ணின் உடலில் எந்த காயமும் இல்லை. அந்த பிணத்தை போலீசார் கைப்பற்றி, பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் மர்மச்சாவு' வழக்கு பதிவு செய்து, மார்ட்டினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி போலீசாரிடம் கேட்ட போது, வெளிநாட்டு பெண் தற்கொலையா? கொலையா? அல்லது அதிக போதையால் மரணம் ஏற்பட்டதா? என்பது, பிரேத விசாரணைக்கு பின் தான் தெரிய வரும்'' என்று கூறினார்கள்.
இதனிடையே வெண்புருசம் குப்பத்தைச் சேர்ந்த கிராம மக்கள், இனி மார்ட்டின் தங்களது கிராமத்துக்குள் நுழையக் கூடாது என்றும் இவரால் ஏற்பட்ட பிரச்சனை இத்துடன் போதும் என்றனர்.












Click it and Unblock the Notifications