விலையை குறைத்தாலும் வாங்க ஆளில்லா கிங்பிஷர் விமான டிக்கெட்டுகள்
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. நட்டத்தில் இயங்கிவரும் அந்நிறுவனமானது அரசுக்கு செலுத்த வேண்டிய பல கட்டணங்களை செலுத்தாத நிலையில் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 40க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பணியாளர்களுக்கு ஊதியமும் கொடுக்கவில்லை. பல விமான சேவைகளை திடீர் திடீரென ரத்து செய்த நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து இயங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் மும்பை போன்ற நகரங்களில் டிராவல் ஏஜெண்டுகள் கிங்பிஷர் விமான நிறுவன டிக்கெட்டுகளை விற்பனை செய்ய பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது என்கின்றனர்.
ரூ5,500க்கு வாங்கிய டிக்கெட்டை ரூ3 ஆயிரத்துக்குக் கொடுக்க முன்வரும்போதுகூட எவரும் வாங்கத் தயாரில்லை என்று தமது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் மும்பை அந்தேரியில் இயங்கி வரும் ஹோட்டல் ஒன்றில் நிர்வாகி தேவங்க் சங்வி.
விலைதான் பிரச்சனை என்றில்லை.. கிங்பிஷரை நம்பி பயணம் செய்தால் சேவைகளும் கூட திருப்திகரமானதாக இல்லை என்பது குபிட் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி பிரதீப்பின் கருத்து.
பயணிகளும் சரி, டிக்கெட் ஏஜெண்டுகளும் சரி கிங்பிஷர் நிறுவனத்தால் தங்களுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு அனுபவத்தாலுமே "கிங்பிஷரா! ஆளைவிடுங்க" என்று கையைத் தூக்கிவிடுகின்ற நிலைமையே இருக்கிறது.