2ஜி.. ஷாகித் பல்வாவை சந்தித்தார் பாஜக தலைவர் முரளிமனோகர் ஜோஷி: புதிய புகார்

Subscribe to Oneindia Tamil

Anshuman
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பி பதவிக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டு, உட்கட்சி கோஷ்டிப் பூசலால் சீட் பறிக்கப்பட்ட என்ஆர்ஐயான அன்ஷுமன் மிஸ்ரா பாஜகவின் மூத்த தலைவர்களான அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீது அடுத்தடுத்து திடுக்கிடும் புகார்களை கூறியுள்ளார்.

லண்டனில் வசித்து வரும் மிஸ்ராவுக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பி பதவிக்குப் போட்டியிட பாஜக தலைவர் நிதின் கட்காரி சீட் தந்தார். இதற்கு பாஜகவிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ராஜ்யசபா சீட் விற்கப்பட்டுவிட்டதாக புகார் கிளம்பியது.

குறிப்பாக ஜார்க்கண்ட் மாநில மூத்த பாஜக தலைவரான யஷ்வந்த் சின்ஹா இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மிஸ்ரா போட்டியிட்டால் அவருக்கு பாஜக எம்எல்ஏக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என அறிவித்தார். இதையடுத்து வேறு வழியின்றி மிஸ்ரா தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

தான் அமெரிக்கா, லண்டனில் ஆர்எஸ்எஸ் கிளைகளுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளதாகவும், பாஜகவின் நீண்ட நாள் உறுப்பினர் என்றும், ஆனாலும் இப்போது
கட்சியில் குழப்பம் விளைவிக்க விரும்பததால் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாகவும் கூறிய மிஸ்ரா, இப்போது பாஜக தலைவர்கள் மீது அடுத்தடுத்து திடுக்கிடும் புகார்களைக் கூறி வருகிறார்.

2ஜி விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக உள்ள பாஜக தலைவர் முரளிமனோகர் ஜோஷி மீது தான் மிகக் கடுமையான குற்றச்சாட்டை மிஸ்ரா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், 2ஜி ஊழலில் தொடர்புடைய ஷாகித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகியோர் முரளிமனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு ஜோஷியின் வீட்டில் நடந்தது. அப்போது நானும் அங்கே இருந்தேன்.

ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வாவுக்கும் கோயங்காவுக்கும் அருண் ஜேட்லி, பியுஷ் கோயல் ஆகிய பாஜக தலைவர்களுடனும் மிகுந்த நெருக்கம் உண்டு. ஆனால், 2ஜி விவகாரம் வெடித்த போது பல்வாவின் பெயரை மட்டும் ஊழலோடு தொடர்புபடுத்தி பாஜக அதிகமாகப் பேசியது. காரணம், அவர் ஒரு முஸ்லீம் என்பதால் தான். இதன்மூலம் 2ஜி விவகாரத்துக்கு மதச்சாயம் பூச முயன்றது பாஜக.

2000ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பாஜகவோடு தோளோடு தோள் நின்றவர்கள் பல்வாவும் கோயங்காவும். குஜராத்தில் பல நல்ல காரியங்களைச் செய்துள்ளனர். இதை பாஜக மறுக்க முடியுமா? என்றார்.

சுஷ்மா சுவராஜ்-லலித் மோடி தொடர்பு:

மேலும் அவர் கூறுகையில், ஐபிஎல் விவகாரத்தில் சிக்கிய லலித் மோடியை தனக்குத் தெரியாது என்று ராஜ்யசபா பாஜக தலைவரான சுஷ்மா சுவராஜ் கூற முடியுமா?. மோடியின் அழைப்பை ஏற்று கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போனவர் தானே சுஷ்மா சுவராஜ் என்றார்.

என்னிடம் பல உதவிகளைப் பெற்றவர் அருண் ஜேட்லி:

மூத்த பாஜக தலைவரான அருண் ஜேட்லிக்கு நான் பல உதவிகளை செய்துள்ளேன். அவரும் நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அவரைப் போலவே நானும் பிரபலமான வழக்கறிஞர் தான். அவரைப் போலவே எனக்கும் பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பு உண்டு.

எனக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் வாழ்த்து அனுப்பியவர் பின்னர் திடீரென எனக்கு எதிரான வேலைகளில் இறங்கினார். அவருக்குப் போட்டியாக நான் வந்துவிடுவேன் என்று பயமோ என்னவோ?. 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது என்னிடம் பல உதவிகள் கேட்டவர் தானே ஜேட்லி. அதை அவர் மறுக்க முடியுமா?.

என்னைப் பிடிக்காவிட்டால் நான் அனுப்பிய கிருஸ்துமஸ் கிப்ட் மட்டும் பிடித்திருந்ததா?. லார்ட்ஸ் மைதானத்தில் எனது பாக்ஸில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க மட்டும் பிடித்திருந்ததா?. லலித் மோடிக்கும் அருண் ஜேட்லிக்கும் உள்ள தொடர்பும் அனைவரும் அறிந்ததே.

எல்லா கட்சிகளும் தங்களுக்கு வேண்டியவர்களிடம் தேர்தலின்போது உதவி கேட்பது வழக்கம். அதே போல பாஜகவுக்கு எனது நண்பர்கள் மூலம் தேர்தல்களின்போது ஏராளமான பண உதவிகளை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் மிஸ்ரா.

இந்தக் குற்றச்சாட்டுகளை முரளிமனோகர் ஜோஷி மறுத்துள்ளார். இவை தவறான குற்றச்சாட்டுகள் என ஜோஷி கூறியுள்ளார். இந் நிலையில் மிஸ்ராவுக்கு எதிராக அருண் ஜேட்லி அவதூறு நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+