வி.கே.சிங்க்கு லஞ்சம் கொடுக்க முய்னற வழக்கு: வெக்ட்ரா அதிபர் ரவிரிஷியிடம் கிடுக்குப்பிடி விசாரணை
டெல்லி: இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்குக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் லண்டன் தொழிலதிபரும் வெக்ட்ரா நிறுவன அதிபருமான ரவிரிஷியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவிரிஷி யார்?
இந்திய ராணுவத்துக்கு லாரிகளை செக்கோஸ்லோவேகியாவின் டாட்ரா நிறுவனத்திடம் இருந்து அரசு நிறுவனமான பிஎம்ஐஎல். வாங்கித் தருகிறது. டாட்ரா நிறுவனத்தின் பெரும்பங்குகளை வைத்திருக்கிறது வெக்ட்ரா குழுமம். வெக்ட்ரா குழுமத்தின் தலைவர் ரவிரிஷி. டெல்லியில்பாதுகாப்புத்துறை தொடர்பான கண்காட்சிக்கு அவர் சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். அப்போதுதான் வி.கே.சிங்குக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
டாட்ரா நிறுவனத்துக்காகத்தான் முன்னாள் ராணுவ துணை தளபதி திஜேந்தர்சிங் ரூ14 கோடியை வி.கே.சிங்குக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதுதான் புகார். இதனால் இந்த வழக்கில் ரவிரிஷியை விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்தது.
போக்கு காட்டிய ரவிரிஷி
ரவிரிஷிக்கு சி.பி.ஐ ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. அவர் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரவிரிஷியின் இருப்பிடத்தை தெரியமுடியாமல் சி.பி.ஐ. தவித்தது. இதனால் ரவிரிஷி இந்தியாவை விட்டு வெளியேற முடியாதபடி அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன. இந்த நிலையில் தாம் விளக்கம் அளிக்கக் கூடுதல் கால அவகாசம் வேண்டுமென சி.பி.ஐயிடம் ரவிரிஷி கேட்டிருந்தார். ஆனால் சி.பி.ஐ. அதனை நிராகரித்துவிட்டது.
சி.பி.ஐ.முன் ஆஜர்
தம் மீதான பிடி இறுகுவதை அறிந்த ரவிரிஷி வேறுவழியின்றி இன்று சி.பி.ஐ. முன் ஆஜராகியுள்ளார். அவரிடம் லஞ்சம் கொடுக்க முன்வந்தது, திஜேந்தர்சிங்குடனான தொடர்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விரிவான விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில்தான் அவர் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவாரா என்பது தெரியவரும்.