கூடங்குளம் அணு உலையில் விரைவில் எரிபொருள் நிரப்பப்படும்: அணு சக்தி தலைவர்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விரைவில் மி்ன் உற்பத்தியை துவங்குவதற்காக முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய அணு சக்தி கழக தலைவர் எஸ்.கே. ஜெயின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மூலம் எஸ்.கே.ஜெயி்ன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்திய அணு சக்தி கழகம் நாடு முழுவதும் 19 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த ஆண்டு 26, 473 மில்லியன் யூனி்ட்களாக இருந்த மின் உற்பத்தி இந்த ஆண்டு 32, 455 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மின் உற்பத்தி 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஃபுகுஷிமா அணு உலை விபத்திற்கு பிறகு நிலநடுக்கம், சுனாமி, இயற்கை சீற்றம் இடர்பாடுகளால் பாதிக்காத வகையில் அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. உயர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களு்ம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் அணு உலையில் கடந்த ஜூலை மாதம் வெப்ப நீர் சோதனை ஓட்டம் நடந்தது. கூடங்குளம் அணு உலை மூலம் விரைவில் மின் உற்பத்தியை துவங்குவதற்காக எரிபொருள் (யுரேனியம்) நிரப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்காக அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் படிப்படியான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
கூடங்குளத்தில் 1வது அணு உலையைத் தொடர்ந்து 2வது அணு உலையும் இயக்கப்படும். தற்போது இந்திய அணு சக்தி கழகத்தின் மூலம் 4,680 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் நடந்து வரும் அணு உலையின் பணிகள் முடிந்தால் 2017ம் ஆண்டு இறுதியில் 9,580 மெகாவாட் மி்ன்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதற்கான திட்டங்கள் தொடஙகியுள்ளன என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.