மீனம்பாக்கத்தில் விமானங்கள் பழுது பார்க்கும் பணிமனை: தமிழக அரசு அமைக்கிறது
சட்டசபையில் இன்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்து அந்தத் துறையின் அமைச்சர் தங்கமணி பேசுகையில்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் விமானங்கள் பழுது பார்க்கும் பணிமனை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டு இதற்கான நிலம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விமான வடிவமைப்பு, பொறியியல் உற்பத்தி சேவை மற்றும் பராமரிப்பு சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு ஏதுவாக ஒருங்கிணைந்த விமான தொழில் பூங்கா அமைப்பதற்கான முயற்சியை டிட்கோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் மீனம்பாக்கத்தில் விமான பணிமனை உருவாக்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே 300 ஏக்கரில் விமான உதிரி பாகம் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொன்னேரி அருகே உள்ள காட்டுப்பள்ளியில் ரூ.3,375 கோடி முதலீட்டில் டிட்கோ மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்கள் இணைந்து கப்பல் கட்டும் தளத்தை கட்டி முடித்துள்ளன.
இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இந்த திட்டத்தின் 2வது கட்டப்பணிகள் ரூ.1,300 கோடி முதலீட்டில் அடுத்த ஆண்டு தொடங்கி 2015ம் ஆண்டு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் நடந்த விவாதத்தில் பேசிய தேமுதிக எம்எல்ஏ அருள் சுப்பிரமணி, தொழிற்சாலைகள் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை. சிப்காட் நிறுவனம் இதை கவனிக்க வேண்டும். நிலம் கொடுத்தவர்களில் ஒருவருக்கு கூட நிஸ்ஸான் உள்பட பல நிறுவனங்கள் வேலை கொடுக்கவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, தொழிற்சாலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்காக நீதிமன்றத்தில் பணம் கட்டப்பட்டுள்ளது. தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகளை பல்வேறு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. உறுப்பினர் சொன்னது போல சில நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதா என்பதை இந்த அரசு ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.