உ.பி. தேர்தலில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் களை எடுக்கப்படுவர்: ராகுல்

மூன்று நாள் பயணமாக உத்தரப்பிரதேசம் சென்றுள்ள ராகுல்காந்தி பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததுப் பற்றி காங்கிரஸ் தொண்டர்கள், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்சியின் கட்டுக்கோப்பான துடிப்பான தொண்டர்களுக்கு உரிய முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை ராகுல் வலியுறுத்தினார். கட்சிக்கு முதுகெலும்பானவர்களே தொண்டர்கள்தான் என்றும் அவர்களது கருத்துகளையே கட்சி பிரதானமாக கேட்கும் என்றார். தொண்டர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் செயல்பட்ட உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
அமேதி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் வரும் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு அனைவரும் இப்போதே தயாராக வேண்டும் என்றும் ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.
ராகுல் தமது அமேதி பயணத்தின் கடைசி நாளில் சில நிகழ்ச்சிகளை ரத்துசெய்துவிட்டு படகு விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அசாம் மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications