திமுக கூட்டணியில் இருந்தும் 'டெசோ' கூட்டத்திற்கு அழைக்கவில்லை: திருமாவளவன்
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தும் 'டெசோ' கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதன் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில், கருணாநிதி, திமுக மூத்த தலைவர்களான அன்பழகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு தீவிர தமிழ் ஈழ ஆதரவாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைக்கப்படவில்லை.
இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது அதைத் தடுக்க அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி முழு அளவில் முயற்சி எடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அப்போது திமுக கூட்டணியிலிருந்த திருமாவளவன் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இந்நிலையில் டெசோ அமைப்பின் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, டெசோ கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று திருமா பதிலளித்துள்ளார்.
எதிர்காலத்தில் அழைப்பு விடுக்கப்பட்டால், கட்சி நிர்வாகிகளோடு பேசி முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் முடிவு அதிமுகவுக்கு சாதகம்:
இந் நிலையில் திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிடாது. அங்கு இப்போது ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றனர். இது போன்ற அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் அவசர அவசரமாக அறிவித்து உள்ளது. இது அதிமுகவுக்கு சாதகமாக அமையும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவிப்பு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டதாக இருக்கலாம்.
திமுக ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை பொது வேட்பாளராக நிறுத்த அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும். இது தொடர்பாக திமுக அனைத்துக் கட்சியினரையும் அழைத்துப் பேசவேண்டும்.
திமுக டெசோ அமைப்பை தொடங்கி இருப்பதை வரவேற்கிறோம். சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற இது உதவும். இலங்கை சென்ற குழுவில் இருந்த காங்கிரஸ் எம்.பிக்கள் பிரதமரிடம் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என அறிக்கை சமர்பித்து உள்ளனர். இது சரி வராது. எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபக்சேயை தனியாக சந்தித்து பேசியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, நெடுமாறன், உதயகுமார், என் மீது உள்ளிட்ட அனைவரது மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.