சித்திரை முழு நிலவு நாளில் விடியலை நோக்கி.. மாமல்லபுரம் வாருங்கள்: ராமதாஸ்
சென்னை: சித்திரை முழு நிலவு நாளான மே 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னிய இளைஞர் விழாவில் கலந்து கொள்ளுமாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நாள் என்றால் அது சித்திரை முழு நிலவு நாள்தான். வன்னியர் சங்கத்தின் சார்பில் வருகிற 5ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெறவுள்ளது.
வெற்றியைப் பெறவும், ஆட்சியை கைப்பற்றவும் தேவையான அனைத்து தகுதிகளும் நம்மிடம் இருந்த போதிலும் அவற்றை இணைத்து ஒருமுகப்படுத்துவதற்கான ஒற்றுமை என்ற பிணைப்பு இல்லாததால்தான் நாம் இன்னும் ஆளப்படுபவர்களாகவே இருக்கிறோம். இனியாவது ஓரணியில் கைகோர்த்து ஆட்சி என்ற இலக்கை எட்டிபிடிக்க வேண்டும்.
ஏற்றிவிடும் ஏணியாகவும் பின்னர் எட்டி உதைக்கப்படும் ஏணியாகவும் இருந்து ஏமாந்து வரும் நாம் இனியாவது ஓரணியில் கைகோர்த்து ஆட்சி என்ற இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி, புதிய அரசியல், புதிய நம்பிக்கையுடன் நடைபோடுவதற்கான பாதையை வகுப்பதற்காகவே மே 5ம் தேதி சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரத்தில் நாம் கூடுகிறோம்.
25 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் இந்த பெருவிழாவில் ஒவ்வொரு பாட்டாளி குடும்பத்தில் இருந்தும் ஓர் இளைஞன் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். இது கூடிக் கலையும் விழா அல்ல. வறுமை, அறியாமை, அதிகாரமின்மை, உள்ளிட்ட இருளில் சிக்கித் தவிக்கும் நமது சமுதாயத்தை சித்திரை முழு நிலவு நாளில் விடியலை நோக்கி அழைத்து செல்வதற்கான வியூகங்களை வகுக்கும் திருவிழா.
சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக நமக்கு இழைக்கப்படும் அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் வீரநடை போடுவதற்கு இந்த விழா சிறந்த வாய்ப்பாகும்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழும் பாட்டாளி பெருமக்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். ஓட்டு போடுகிற, கொடி பிடிக்கிற, கோஷம் போடுகிற, இலவசங்களுக்கு கையேந்துகின்ற சாதியாக மாற்றியது மட்டுமின்றி, திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வன்னியர்களை வாழ வைப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவும் அதற்கான சூளுரையை ஏற்கவும் கூடுவோம் மாமல்லபுரத்தில் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.