காய்ச்சல் பரவிய பகுதிகளில் துர்நாற்றம்: மூக்கைப் பிடித்துக்கொண்டு நெல்லை கலெக்டர் ஆய்வு
கடையநல்லூர்: மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பார்வையிட்டார். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியதால் அவர் மூக்கைப் பிடித்துக் கொண்டே வந்தார்.
கடையநல்லூர் பகுதிகளில் கலக்கி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களை அச்சுறுத்தும் இந்நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு உயர் அதிகாரிகள் கடையநல்லூர் பகுதியில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு காய்ச்சலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகின்றனர். சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மீரா முகைதீன் கடையநல்லூர் பகுதியில் முகாமிட்டு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பணியை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இந்த நடவடிக்கைக்கு பின்பு கடையநல்லூர் நகராட்சி பகுதியில் இறப்பு ஏற்படவில்லை என்று கூறப்பட்ட போதிலும் காய்ச்சலால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. தினம்தோறும் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி கொண்டு செல்லப்படுகின்றனர். டெங்கு காய்ச்சலை கண்டறிய கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பிலேட்லெட்ஸ் கண்டறியும் கருவி நிறுவப்பட்டுள்ளது. ஆனால் போதுமான அலுவலர்கள் இல்லாததால் கருவி செயல்படாமல் உள்ளது. இதனால் நோயாளிகள் எதற்கு வீண் ரிஸ்க் என கருதி நெல்லைக்கே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடையநல்லூர் பகுதியில் பரவும் காய்ச்சல் ஏ.டி.எஸ். என்னும் கொசுவினால் பரவுகிறது எனவும், இந்த கொசு வீட்டில் உள்ள நல்ல தண்ணீரில் தான் வளர்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இக்கொசுவை ஒழிக்கவும், பெருக்கத்தை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கடையநல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலத்திட்ட மாணவ, மாணவியர் 100 பேர் ஆசிரியர்களுடன் சென்று தண்ணீரை மூடிவைக்கவும், கழிப்பறை குழாய்களை வலையால் மூடி வைக்கவும் மக்களை கேட்டுக் கொண்டதோடு செய்தும் காண்பித்தனர். சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடித்தனர்.
இந்த பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டார். கடையநல்லூர் பெரிய தெரு, அட்டைக்குளம் தெரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கி பேசினார். கலெக்டரிடம் பொதுமக்கள் கடையநல்லூர் பகுதியில் ஓடை, கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு கட்டப்படுவதுடன், செப்டிக் டேங்க் கழிவுகள் கால்வாய்களில் வெளியிடப்படுவதாகவும், குளம் போன்ற நீர்நிலைகளில் சாக்கடை நிரம்பி பல்வேறு நோய்களை பரப்புவதாவகவும் புகார் தெரிவித்தனர்.
நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாகவும் பலர் குற்றம் சாட்டினர். பொதுமக்களிடம் கலெக்டர் செல்வராஜ் தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் வீடுகளில் உள்ள நல்ல தண்ணீரில் வளரும் கொசுக்களால் தான் வளருகிறது. எனவே வீடுகளில் உள்ள நல்ல தண்ணீரை மூடி வைக்க வேண்டும். மற்றும் வீடுகளில் சிரட்டை, பாத்திரங்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். இவற்றில் தான் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் முட்டையிட்டு கொசுக்களாக பெருகுகிறது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுபாட்டிற்குள் உள்ளது. காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் மேற்க்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பார்வையிட்ட பல பகுதிகளில் தூர்நாற்றம் வீசியதால் கலெக்டர் மூக்கை பிடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டியது இருந்தது.
கலெக்டருடன் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மோகன், ஆர்.டி.ஓ. ராஜா கிருபாகரன், தாசில்தார் தேவபிரான், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் சைபுன்னிசா உள்பட பலர் உடன் சென்றனர்.