மெட்டல் டிடெக்டரில் சிக்காத வெடிகுண்டு: யு.எஸ். விமானத்தை தகர்க்கும் அல்-கொய்தா சதி முறியடிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க விமானம் ஒன்றை தகர்க்கும் அல் கொய்தா தீவிரதவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானங்களை தகர்க்க அல் கொய்தா திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்க விமானம் ஒன்றை தகர்க்கும் அல் கொய்தா தீவிரவாதிகளின் சதி திட்டத்தை அமெரிக்க மற்றும் பிற உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முறியடித்துள்ளனர். மேலும் விமானத்தில் இருந்து உலோகம் கலக்கப்படாத வெடிகுண்டையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வகை குண்டு விமான நிலையங்களில் உள்ள மெட்டல் டிரெக்டரில் இருந்து தப்பிவிடும். இந்த சதிக்குப் பின்னால் ஏமனைச் சேர்ந்த அல் கொய்தா அமைப்பு உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு டெட்ராய்ட் செல்லும் விமானத்தில் இருந்து இதுபோன்ற உலோகமில்லா வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அல் கொய்தாவின் சதியை முறியடித்த அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள வெடிகுண்டு மனித உடலில் பொருத்துவதற்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளது. அல் கொய்தா தீவிரவாதிகள் ஆபரேஷன் மூலம் வெடிகுண்டுகளை வயிற்றுக்குள் பொருத்தி அமெரிக்க விமானங்களைத் தகர்க்க திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைத் தாக்கும் திட்டமுள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதையே இந்த சதி முறியடிப்பு நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. அமெரிக்காவை பாதுகாக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம் என்று பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா தெரிவித்துள்ளார்.