ஓங்கி மிதித்து என் உயிரைக் காப்பாற்றினார் நித்தியானந்தா-மதுரை ஆதீனம்

மதுரையில் செய்தியாளர்களிடம் ஆதீனம் பேசுகையில்,
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நித்தியானந்தாவிற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. நியாயமே வெல்லும் என்ற கருத்திற்கு வலிமை ஏற்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சித்த தருமபுரி ஆதீன மடத்தின் மதுரை நிர்வாகி குருசாமி தேசிகர், இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் ஆகியோர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்யப்படும்.
இதற்கான நடவடிக்கைகளில் நித்தியானந்தா ஈடுபடுவார். அடுத்த ஆதீனத்தை நியமிக்க எனக்கு உரிமை உண்டு. அதுபற்றி காஞ்சி ஜெயேந்திரர் பேசக்கூடாது. காஞ்சி பீடத்திற்கு நான் பல தடவை உதவியிருக்கிறேன். அதுபோல திருவாடுதுறை ஆதீனத்திற்கும் பல உதவிகளை செய்திருக்கிறேன். அதனால் அவர்கள் எனக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
34 வயதில் ஆட்பலம், பண பலம், ஆற்றல், நிர்வாகத்திறன் இருப்பதால் தான் நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக்கியுள்ளேன். நித்தியானந்தா போல் திறமை கொண்ட ஒருவரை எதிர்ப்பாளர்கள் காட்டினால் அவரை நான் ஆதீனமாக்குகிறேன்.
எனது செய்தியை பரபரப்பாக்கி என்னை யாரும் மிரட்ட வேண்டாம். நான் எதையும் பதுக்கவும் இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். நான் சிங்கம் போன்றவன். என்னை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம்.
நேற்று கூட ஆதீன மடத்தில் நான் லிப்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதாகிவிட்டது. உடனே எனது கையில் இருந்த செல்போன் மூலம் நித்யானந்தாவிற்கு தகவல் தெரிவித்தேன். உடனே அவர் ஓடி வந்து லிப்டின் கதவில் ஓங்கி மிதித்து என்னை காப்பாற்றி விட்டார். லிப்ட் சாவியை எதிர்பார்க்காமல் என் உயிர் மீது அக்கறை கொண்டு செயல்பட்டவர்தான் நித்தியானந்தா என்றார் ஆதீனம்.












Click it and Unblock the Notifications