நித்யானந்தாவை நீக்கக் கோரி கலெக்டர் சகாயத்திடம் மனு: நடவடிக்கை எடுப்பதாக உறுதி
மதுரை: மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தாவை நீக்கக் கோரி மதுரை கலெக்டர் சகாயத்திடம் மதுரை ஆதீன மீட்புக்குழுவினர் புகார் மனு கொடுத்துள்ளனர்.
மதுரை ஆதீன மீட்புக்குழு பாரதீய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன், மதுரை மீனாட்சி பிள்ளைகளின் அமைப்பு தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
மதுரையை தலைமையிடமாக கொண்டு 1500 ஆண்டுகளுக்கு முன் திருஞான சம்பந்தரால் மதுரை ஆதீன மடம் தோற்றுவிக்கப்பட்டது. 293வது ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்துள்ளதாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தொடர்ந்து கூறி வருகிறார்.
நித்யானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாலியல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க நித்யானந்தா தகுதியற்றவர் என திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட அனைத்து மடாதிபதிகளும் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கைப்பற்ற போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி சட்டம், ஒழுங்கை சீர்கெடுக்க நித்யானந்தா முயற்சிக்கிறார். எனவே மதுரையை கலெக்டர் பாதுகாக்க வேண்டும்.
மேலும் இந்து அறநிலையத்துறை மூலம் 59, 60 சட்டத்தின் கீழ் இந்த ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும். 292வது ஆதீனமாக உள்ள அருணகிரிநாதரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மடத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும். இதை அரசு செய்ய தவறும்பட்சத்தில், திருஞான சம்பந்தரின் குரு பூஜை நாளான அடுத்த மாதம் 5ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து சிவனடியார்கள், பொதுமக்களை திரட்டி மதுரை ஆதீன மீட்பு குழுவினர் மடத்தை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
புகார் மனு குறித்து சகாயத்திடம் கேட்டபோது, மதுரை ஆதீனம் குறித்து புகார் மனு வந்துள்ளது. இது குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.