நேபாள விமான விபத்தில் சென்னை பெண் உள்பட 2 தமிழர்கள் பலி; தந்தை- 2 மகள்கள் உயிர் தப்பினர்
இந்த விபத்தில் சென்னை இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரின் மனைவி பலியாகிவிட்டார். ஆனால், அவரும் அவரது இரு குழந்தைகளும் உயிர் தப்பிவிட்டனர்.
நேபாள நாட்டின் ஜோம்சோம் நகரம் அருகே புகழ்பெற்ற முக்திநாத் ஆலயம் அமைந்துள்ளது. திபெத் எல்லை அருகே இமயமலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு இந்தியர்கள் புனிதப் பயணம் செல்வது வழக்கம். நேபாள தலைநகர் காத்மாண்டு மற்றும் பொகாரா நகரில் இருந்து இந்தக் கோவில் இருக்கும் பகுதிக்கு சிறிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று அக்னி ஏர் என்ற தனியார் நிறுவனத்துக்கு சிறிய விமானம் பொகாராவில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோம்சோம் சென்றது. மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜோம்சோம் விமான நிலையத்தில் காலை 9.30 மணிக்கு தரையிறங்க முயன்ற போது மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 21 பேர் இருந்தனர். இவர்களில் 13 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலியாகி விட்டனர். இவர்களில் 3 பேர் தமிழர்கள் ஆவர். பலியான 15 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.
விபத்தில் உயிர் தப்பியவர்களில் 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களது பெயர் ஸ்ரீகாந்த் (வயது40). அவரது மகள் ஸ்ரீவர்தினி (9), மகன் ஸ்ரீபாதா (6) என்பது தெரியவந்தது.
விபத்தில் பலியானவர்களில் எஸ்.சுதர்சன் என்கிற சுதா பட்டாச்சார்யா (45), லதா (35) ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். சுதா பட்டாச்சார்யா கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரைச் சேர்ந்த ஒரு சுற்றுலா குழுவினருடன் சென்ற போது விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், அமுதபிரியா (17), ஸ்ரீதர் (11) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
விபத்தில் பலியான மற்றொரு தமிழரான லதா சென்னையை சேர்ந்தவர். இவர் தனது கணவர் ஸ்ரீகாந்த் மற்றும் 2 குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற போது விபத்தில் பலியாகிவிட்டார்.
சாப்ட்வேர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சென்னை விருகம்பாக்கம், தனலட்சுமி காலனி, கிரேசி என்கிளேவ் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். விபத்தில் ஸ்ரீகாந்துக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது குழந்தைகளான ஸ்ரீவர்தினிக்கு காலில் எலும்பு முறிவும், ஸ்ரீபாதாவுக்கு நெற்றியில் காயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானி மகாராஜன் என்பவரும் பலியாகியுள்ளார். அவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் 19 பேர் பலியாயினர். அதில் 10 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இமயமலையின் அழகை ரசிக்க சென்றபோது அவர்கள் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மலையில் மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்து நடந்த 8 மாதங்களுக்குள் மற்றொரு விபத்தை நேபாளம் சந்தித்துள்ளது.