3ம் ஆண்டு நிறைவு விருந்தை முடித்த கையோடு மக்கள் தலையில் அடித்த மத்திய அரசு!

பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் கால்குலேட்டிவாக செயல்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த பின்னர், 3வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய பின்னர், தலைவர்களுடன் விருந்துண்ட பின்னர், இந்த விலை உயர்வை மத்திய அரசு அமல்படுத்தியிருக்கிறது.
முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தது முதலே பெட்ரோல், டீசல் விலை சரமாரியாக உயர்ந்து கொண்டேதான் வந்தது. விலையை ஏற்றுவதில் ஆர்வம் காட்டும் மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரியும்போது அதைக் குறைப்பதில் வேகம் காட்டுவதில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலை டிசம்பர் வரை பல முறை உயர்த்தப்பட்டது. உ.பி. உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் வந்ததால் அதன் பிறகு விலையை உயர்த்த மத்திய அரசு தயங்கியது. எண்ணெய் நிறுவனங்களுக்கு வாய்மொழியாக தடை விதித்தது.
தேர்தல் முடிந்ததும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கி விட்டதால் விலை உயர்வுக்கு மத்திய அரசு அஞ்சியது. எதிர்க்கட்சிகளை சமாளிக்க முடியாது என்ற அச்சமே அதற்குக் காரணம்.
இந்த நிலையில், ரூபாயின் மதிப்பு படு வேகமாக கீழிறங்க ஆரம்பித்ததால் பெட்ரோலிய நிறுவனங்கள் மத்திய அரசை நெருக்க ஆரம்பித்தன. ரூ. 8 வரை விலையை உயர்த்தியாக வேண்டும் என்று அவை மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. ஆனால் நாடாளுமன்றக் கூட்டம் முடியும் வரை காத்திருக்க மத்திய அரசு விரும்பியது. மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3வது ஆண்டு நிறைவுக்கு முன்பாக இதைச் செய்யவும் அது யோசித்தது.
தற்போது இந்த இரண்டையும் முடித்த பின்னர், கூட்டணித் தலைவர்களுடன் விருந்து சாப்பிட்டு முடித்த கையோடு தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டனர்.
மக்களிடையே இந்த பெட்ரோல் விலை உயர்வானது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. இத்தனை காலமாக ஆட்சியில் நீடிக்க விட்டதற்கு காங்கிரஸ் தந்துள்ள சரியான பரிசுதான் இது என்று அவர்கள் புலம்பியதைப் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications