எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கை தூக்கிலிட வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்
கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை தூக்கிலிட வேண்டுமென்று வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
எகிப்தில் மக்கள் புரட்சியால் கடந்த ஆண்டு ஆட்சியை இழந்தவர் முபாரக். புரட்சியின் போது ராணுவத்தை ஏவி விட்டு 846 பேரை கொலை செய்த வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது எதிர்ப்பாளர்கள் இந்த தண்டனையால் திருப்தியடையவில்லை.
ஈவு இரக்கமின்றி தனது நாட்டு மக்களையே கொன்று குவித்த அவருக்கு மரண தண்டனைக்கு பதிலாக குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையே வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக முபாரக்குக்கு எதிரான புரட்சியின்போது மக்கள் பெருமளவில் கூடி போராடிய கெய்ரோவில் உள்ள தெஹ்ரி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். இதேபோல நாடு முழுவதிலும் ஏராளமானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முபாரக்கின் மகன்கள் ஆலா, காமல் ஆகியோர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அவர்கள் குற்றவாளிகள் இல்லையென அறிவிக்கப்பட்டாலும் இப்போதும் தடுப்புக் காவலில்தான் உள்ளனர். ஏனெனில் பங்குச் சந்தையில் முறைகேடு செய்த வழக்கும் அவர்கள் மீது உள்ளது.
எகிப்தில் 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர் முபாரக். கடந்த ஆண்டு மக்கள் புரட்சி வெடித்து, 18 நாள்களில் ஆட்சியை இழந்தார்.












Click it and Unblock the Notifications