இணையதள ஆவண திருட்டு வழக்கு: 2 என்.ஆர்.ஐ.க்கு இங்கிலாந்தில் சிறை
லண்டன்: இங்கிலாந்தில்இணையதளங்களில் ஊடுருவி பல்வேறு தகவல்களை திருடி மோசடி கும்பலுக்கு விற்ற வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர் உட்பட 6 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தி வந்த ஜெய்பால் சிங் மற்றும் மாணவர் அருண் தியார் உள்ளிட்ட 6 பேர் மீதான சைபர் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெய்பால்சிங்குக்கு 18 மாதங்களும் அருணுக்கு 6 மாதமும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இணையதளங்களில் ஊடுருவி பலரது ரகசிய தகவல்களை திருடி மோசடி நபர்களுக்கு விற்பனை செய்தனர் என்பது இவர்கள் மீதான புகார். இதற்கென ஒரு கட்டணம் வசூலித்த இந்த கும்பல், மோசடி செய்து கிடைக்கும் பணத்தில் இருந்து 50 சதவீதத்தையும் மிரட்டி வசூலித்து இருக்கிறது.
அதாவது உங்களது கிரெடிட் கார்ட் குறித்த ரகசியக் குறியீட்டு எண்ணை மோசடி கும்பலுக்கு ஒரு ரேட் பேசி விற்பது. அந்த கும்பல் வெற்றிகரமாக உங்கள் பணத்தை லவட்டி விட்டது எனில் மீண்டும் அந்த கும்பலைத் தொடர்பு கொண்டு 50 சதவீத கமிஷன் எங்களுக்கு தராவிட்டால் மாட்டிவிட்டுவோம் என்று மிரட்டி பணம் பறிப்பது.. இந்த ஸ்டைலில்தான் வெளிநாடு வாழ் இந்தியர் உள்ளிட்ட 6 பேரும் மோசடி செய்து வந்திருக்கின்றனர். அதனால்தான் இப்போது கம்பி எண்ணுகின்றனர்.